ரத்த அழுத்தம்:
பொதுவாக ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. வழக்கமான உடற் பரிசோதனைகளின் போது இதைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் நெருங்கிய உறவினர் களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அதற்கான வாய்ப்பு உங்களுக்கும் அதிகம் என்பதைக் கவனத்தில் கொண்டு அவ்வப்போது சோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், மன உளைச்சலைத் தரும் நிகழ்வுகளால் தொடர்ந்து தூக்கமின்றியும் தவிப்பாகவும் இருக்கும்போது சோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்படி நடப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகள்:
உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கியமாக வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து (life style) சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
1. உடல் எடையைக் குறைத்தல்.
2. புகைப் பிடிப்பதை நிறுத்துதல்.
3. ஆரோக்கியமான உணவு முறை
4. உணவில் உப்பைக் குறைத்தல். (தமிழ்நாட்டு மக்கள் ஏன்தான் இவ்வளவு அதிக உப்பும் சர்க்கரையும் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை!)
5. நாள்தோறும் முறையான உடற்பயிற்சி.
6. மது அருந்துவதைக் குறைத்தல்.
இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். எச்சரிக்கை! மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளைக் கூட்டியோ குறைத்தோ உட்கொள்ளாதீர்கள்.
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
நலமான (ஆரோக்கியமான)உணவு, அதாவது DASH (Dietary Approaches to Stop Hypertension) diet எனப்படும் உணவு முறை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது வழக்கமாக உண்ணும் முறையிலிருந்து மாறுபட்டது. அதாவது,
- அதிக அளவு பழங்கள்,காய்கறிகள், மற்றும் கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் உணவுகள்.
- கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்.
- தானிய வகைகள், மீன், கொழுப்பில்லாத கோழிக் கறி ஆகியவை.
- இனிப்பு மற்றும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் குறைவாக உண்ணல்.
- மக்னீசியம், பொட்டாசியம் , மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளல்.
இக்காலத்தில் இளைஞர்களையும் கூட இந்நோய் தாக்குவதால் 20 வயதிலிருந்தே ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அவர்களும் மேற்கண்ட உணவு முறைகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது கட்டாயம்.
தினந்தோறும் நம்மைச் சுற்றி பல அநியாயங்களும், மனக்குமுறல்களை உண்டாக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடவேண்டிய சமுதாயக் கடமையும் நமக்கிருக்கிறது. அப்போதெல்லாம் நம் குருதியழுத்தம் கொதி நிலைக்கு வரும் என்பதும் உண்மை. அந்த உணர்ச்சிதான் நமக்குப் போர்க்குணத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்தப் போர்க்களத்தில் நிலைத்து நிற்க நம் உடலையும் மனதையும் பக்குவப்படுத்த மேற்சொன்ன நல வழிகளைப் பின்பற்றி நீண்ட நாள் வாழ்ந்து நாமும் சமுதாயமும் பயன் பெறுவோம்.