சித்தர்கள்
சித்தம் என்றால் அறிவு ; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு ; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
முதல் தகுதி: சித்தத்தை அடக்கவல்லவர்கள்
இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்
மூன்றாம் தகுதி: முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.
நான்காம் தகுதி: பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.
ஐந்தாம் தகுதி: உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.
பதினெட்டு சித்தர்கள் :
திருமூலர் புலத்தியர் நந்தி தேவர் இடைக்காடர் அகத்தியர் புண்ணாகீசர் போகர் புலிக்கீசர் கொங்கணவர் அமுகண்ணி பாம்பாட்டி குதம்பை கோரக்கர் அகபேய் சித்தர் தேரையர் சட்டமுனி பூனைக்கண்ணர் காலங்கிநாதர் போன்ற பதினெட்டு சித்தர்களும் தன்னையடக்கி தரணியை வெல்ல தலைப்பட்டவர்கள். முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள்.
இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார். இவர்களோடு கபிலர் தொல்காப்பியர் திருவள்ளுவர் தாயுமானவர் பட்டினத்தார் வடலூர் வள்ளலார் ஆகியோர்களும் சித்தர்கள் என்ன கருதப்படுகிறார்கள்.
==--==