கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதைஅறிய என்ன வழி?
மருத்துவர் பதில்: வெளிமூலம் இருந்தால் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் வலியுடன் முள்ளின் மீது உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும்.
மூல நோயின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரை நாளங்களில் பட்டானி போல சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும்.
இரண்டவது நிலையில் பட்டானி வடிவில் இருந்த வீக்கம் வெளியே தெரியும்படி சற்று பெரிதாக காணப்படும், வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.
மலம் கழிக்கும் போது வலி மிகவும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அவதிப்படுவார்கள். மேலும் மலங்கழிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே பயப்படுவார்கள்.
வீக்கத்திலிருந்து திரவக்கசிவு அல்லது இரத்தக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் அரிப்பு (நமைச்சல்) ஏற்படும். இந்நிலையில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
மேற்கண்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது வெளிமூலம் என நீங்கள் அறியலாம். அவ்வாறு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுங்கள்.
கேள்வி: மூல நோயின் அறிகுறிகள் என்ன? மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் வீக்கமடைவதன் மூலமாக மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும்.
மலம் கழிக்கும்போது அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதிக்கு சதை தள்ளப்படும். ஆசனவாயின் உள் பகுதி வீக்கமடைவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் அழைக்கிறோம்
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை, தொப்பை உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலம் உண்டாகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும்.
ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சிலருக்கு மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
மாற்று மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை இருக்கிறது.முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் தோன்றி ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும்.
எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.