தெரிந்த பெயர்கள் தெரியாத மருத்துவ பயன்கள்-2
அதிவிடயம் :- இதற்கு மலத்தைக் கட்டல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சுரம், முறைசுரம், பேதி முதலியன குணமாகும். இதன் தனிச்சூரணம் 1/4-1/2 வராகனெடை வீதம் தேனில் வழங்கலாம். அல்லது இதனைத் தனியாகவாவது அல்லது மற்றச் சரக்குகளுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு வழங்குவதுண்டு. இது பேதியுடன் கூடிய சுரத்திற்குச் சிறந்தது.
அமுக்குராக் கிழங்கு :- இதற்கு காமத்தைப் பெருக்கல், உடலைத் தேற்றல், பலந்தரல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாத நோய்கள், வீக்கம், தாதுநட்டம், பலயீனம் முதலியன குணமாகும். இதைப் பாலில் வேகவைத்து இடித்துச் சூரணத்துச் சமன் சர்க்கரை சேர்த்து 1/2 -1 வராகனெடை நெய்யில் அருந்திவர மேற்கூறப்பட்ட குணங்கள் உண்டாகும்.
அபினி :- இதற்கு மலத்தைக் கட்டல், வேதனைகளைத் தனித்தல், இசிவகற்றல், நித்திரையை உண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வயிற்றுவலி, பேதி, வாந்தி, இரைப்பு, இருமல், காதுநோய், இசிவு, நித்திரையின்மை முதலியன குணமாகும். ஒரு உச்சிக்கரண்டி நல்லெண்ணெயில் பயறளவு அபின்கூட்டி எரித்து 2-துளி காதில் விட காது வலி குணமாகும். ஒரு ஜாதிக்காயைத் துளைத்து அதனுள் ஒரு குன்றி அபினியைச்செலுத்தி, துளைவாய்க்கு சாதிக்காய் தூளையே போட்டு அடைத்து, நெய்விளக்கின் சுடரில், காய் வேகுமட்டும் சுட்டெடுத்து அரைத்து சிறு உளுந்தளவு மாத்திரைகள் செய்து கொடுத்துவர அசீரணபேதி, அதிசாரம், கிரகணி முதலியன குணமாகும்.
கஞ்சா :- இதற்கு இசிவகற்றல், வேதனையைத் தணித்தல், நித்திரையுண்டாக்கல், காமத்தைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் தாது விருத்திக்குரிய லேகியங்களிலும், கிரகணி, பெரும்பாடு போன்ற நோய்கட்குரிய மருந்துகளிலும் சேர்த்து வழங்குவதுண்டு.
வெட்பாலை :- இதற்கு துவர்ப்புச் செய்கையுண்டு. இதனால் பேதி, சீதபேதி முதலியன குணமாகும். வெட்பாலையரிசி அல்லது பட்டையைக் குடிநீரிட்டாவது அல்லது இடித்துச் சூரணமாகவாவது வழங்க பேதி, சீதபேதி முதலியன குணமாவதுடன், சுரத்திற்குப்பின் காணும் உடல் இளைப்பு முதலியன நீங்கி உடலுக்கு உரத்தையுந் தரும்.
நேர்வாளம் :- இதற்கு பேதியை உண்டுபண்ணுஞ் செய்கையுண்டு. இதனால் மலக்கட்டு, வாதரோகம், விஷம், குன்மம், சூலை முதலியன குணமாகும். இது துர்பலமுள்ளவர், வயது முதிர்ந்தவர், கருப்பிணிகள், பித்த நோயுள்ளவர் முதலியவர்கட்குச் சிறந்ததல்ல.
இதனைத் தனியாக வழங்குவதில்லை. பேதியாகும் மருந்துகளில் சேர்த்து வழங்கப்படும். இதை மருந்துகளில் சேர்க்கும் முன் முறைப்படி நன்கு சுத்திசெய்து சேர்க்கவேண்டும். இன்றேல் சில துர்குணங்களை யுண்டாக்கும்.
நிலாவாரை :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கை யுண்டு. இதனால் நாட்பட்ட மலச்சிக்கல், மூலவாயு, குன்மம், சுரம் முதலியன குணமாகும். இது சிறு குழந்தைகள், மெலிந்தவர், முதிர்ந்தவர், கருப்பிணிகள் முதலியவர்கட்கும் வழங்கப் பயன் படும். இதன் சூரணத்தை பாலில் பிட்டவியலாக அவித்தெடுத்து வழங்க சூடு செய்யாமல் மலத்தை கழிக்கும். இதன் சூரணத்தில் 1/4 முதல் 1/2 வராகனெடை வீதம் தனியாகவாவது அல்லது ஒரு தோலா குல்கந்துடனாவது சேர்த்து இரவு படுக்கைக்குப் போகும் போது அருந்திவர, மலச்சிக்கல் குணமாகும். இன்னும் இத்துடன் சுக்கு, மிளகு, ஓமம் வாய்விளங்கம், இந்துப்பு இவைகளைச் சம னெடையாகச் சேர்த்திடித்துச் சூரணித்து வேளைக்கு 1-2 வராக னெடை வீதம் கொடுத்துவரலாம். அல்லது 1 பலம் நிலாவாரை யுடன், 1 வராகனெடை சுக்குத்தூள் சேர்த்து ஆழாக்கு வெந்நீரில் ஊறல் குடிநீராகச் செய்து 1/4,1/2 ஆழாக்கு வீதம் சிறிது இந்துப்புச் சேர்த்து வழங்கி வரலாம். இதனால் வயிற்றுப்புசம், வயிற்றுவலி, மலபந்தம், வாய்வு, கைகால் கீல்களின் பிடிப்பு முதலியன குணமாகும்.
சிவதைவேர் :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கையுண்டு. இதனால் பழையமலம், மேல்நோக்கும் வாய்வு, பித்தவாத தொந்தம், பாலகிரக தோஷம் முதலியன குணமாகும். இதை வழங்குவதற்கு முன்பு சுத்தி செய்துக்கொள்ளவேண்டும். அதாவது இதன் நடுநரம்பை நீக்கிப் பாலில் பிட்டவியலாகச் செய்தெடுத்துக்கொள்வதாம். இது பாலர்கட்குக் காணும் மாந்தம், தோஷம், மலச்சிக்கல் முதலிய பிணிகட்கு வழங்கச் சிறந்த சரக்காகும். இதன் தனிச் சூரணம் 1/4 1/2 வராகனெடை வீதம் தனியாக
வாவது அல்லது அத்துடன் சமன் இந்துப்பு சேர்த்தாவது வழங்க நன்கு பேதியாகும். அல்லது சுத்தி செய்த சிவதைவேர்ச் சூரணம் 4-தோலாவுடன் திப்பிலிச்சூரணம் 1-தோலா சேர்த்து, இவைகட்குச் சமனெடை சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு, இதில் வேளைக்கு 10-20 குன்றி எடை வீதம் கொடுத்துவர மலசிக்கல் நீங்கும். வயிற்றுவலி, மலாசயக் கிருமி முதலியவைகளும் குணமாகும்.
கரியபோளம் :- இதனை மூசாம்பரம் எனவுங் கூறுவர். இதற்கு பேதியை உண்டாக்கல், ருதுவை யுண்டாக்கல், பசித்தீயைத் தூண்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மேகசூலை, வீக்கம், வயிற்றுவலி, குன்மம், சூதகச்சிக்கல் முதலியன குணமாகும். இதில் 1-முதல் 3-குன்றி எடை கொடுக்க மலத்தைப்போக்கும் இத்துடன் சமன் காயம் சேர்த்து தேன் விட்டுஅரைத்து வேளைக்கு 2 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர சூதகச்சிக்கல் சூதக வயிற்றுவலி முதலியன குணமாகும். இதை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, கீல்வாயு, விரதவீக்கம், மேகக்கட்டி முதலியவைகட்கு பற்றிட்டு வர குணமாகும்.
கழற்ச்சி :- இதன் விதை, வேர்பட்டை இவைகட்கு இசிவையகற்றல், முறை சுரத்தை தடுத்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் அண்டவாதம், வயிற்றுவலி, சூலை, சுரம் முதலியன குணமாகும். இதன் வேர்பட்டையை சூரம் 5-7 1/2 குன்றி எடை வீதம் கொடுத்து வர முறை சுரம் முதலியன குணமாகும். இதில் வேளைக்கு 10-15 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர அண்டவாய்வு, வயிற்றுவலி, சுரம் முதலியன குணமாகும். கழற்ச்சிப் பருப்பை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, அண்ட வீக்கத்திற்க்கு மேலுக்குப் பற்றிட்டு வர அண்ட வீக்கம் குணமாகும்.
சடமாஞ்சி :- இதற்கு இசிவையகற்றல், கோழயை அகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் காசம், இரைப்பு, இரத்த பித்தம், சுரம் முதலியன குணமாகும். இதன் சூரணம் 2 வராகனெடை எடுத்து ஆழாக்கு வெந்நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து 2அல்லது3 வேளையாக கொடுத்து வர சூதகச்சன்னி, வலி மூர்ச்சை, சுரம் முதலியன குணமாகும்.
சேராங்கொட்டை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ்செய்கையும், உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு, மேகவிரணம், கிரந்தி, குட்டம், காணாக்கடிவிஷம், வாத ரோகம், குன்மம் முதலியன குணமாகும். இதனைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் இதரச்சரக்குகளுடன் சேர்த்து,வல்ல்லாததி லேகியம், முதலியன செய்து வழங்குவதுண்டு, இதனால் மேற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். ஆனால் இதனை முறைப் படி நன்கு சுத்தி செய்து மருந்துகளில் சேர்க்க வேண்டும்.
பறங்கிச்சக்கை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ் செய்கையும்,உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு சர்மவியாதிகள், மேக விரணம்,குட்டம், கடி விஷம், வாதப்பிணிகள், நீரிழிவு, தகம் முதலியன குணமாகும். பறங்கிச்சக்கைகளின் மேல் தோலை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி ஓர் கோப்பையிலிட்டு மூழ்க வல்லாரைச்சாறு விட்டு 10 நாள் இரவியில் வைத்து, முற்றுலர்ந்த பின்பு இடித்துச் சூரணித்து வேளைக்குத் திரிகடிப் பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறப்பட்ட நோய்கள் குணமாகும்.
நன்னாரிவேர் :- இதற்கு சிறுநீரை பெருக்கல், உள் அழலை ஆற்றல், உடலைத்தேற்றல், இரத்தத்தை சுத்திசெய்தல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பித்தாதிக்கம், உட்சூடு, மதுமேகம் தாகம், சொறி சிரங்கு, கிரந்திமுதலிய மேகப்பிணிகள், நீர்ச்சுருக்கு முதலியன குணமாகும். நன்னாரி வேர்ப்பட்டையை உலர்த்தி இடித்துச் சூரணித்து வேளைக்கு 1/2-1 விராகனெடை வீதம் சமன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலில் அருந்திவர மேற்கூறிய பிணிகள்குணமாகும். இன்னும் இதனைக் குடிநீராய்ச்செய்து பால் சேர்த்து அருந்தி வரலாம். மணப்பாகு செய்தும் வழங்குவதுண்டு.
---