பெண்களுக்கான மார்பக சுய பரிசோதனை
மார்பக சுய பரிசோதனை செய்வது இருபது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.
முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா, மார்பகங்களின் தோலில் ஏதாவது நிறமாற்றம், தோல் உள்ளிழுத்தபடி காணப்படுதல் அல்லது முலைக்காம்பு உள்ளிழுத்தபடி காணப்படுகிறதா என்பதை பார்க்கவேண்டும்.
சாதாரண நிலையில் கவனித்த பின்பு , உங்கள் இரு கைகளையும் இடுப்பிலே இறுக்கமாக அழுத்தியபடி மார்பகங்களில் மேற்சொன்ன ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று
அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.
அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும். இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.
இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு அளவு ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும்! அதனால் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது!
ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி நெல்லிக்காய் அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை செய்தால், மார்பக கொழுப்பு அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.
---