பனிக்காலத்தில் வரும் நோய்களும் அதன் தடுப்பு முறைகளும்
கோடைக்காலத்தில், மழைக்காலத்தில் என்றில்லை! பனிக்காலமும் பற்பல பிணித் தொந்தரவுகளுக்கு நம்மை உள்ளாக்கக்கூடியதுதான்! ஆனால் அதற்கும் நமது சுற்றுப்புற, சுகாதாரச் செயல்முறைகளில் இருக்கும் ஆர்வமின்மையும் அக்கறையின்மையுமே காரணமாக அமைகின்றது என்பது ஆச்சர்யமான ஒற்றுமைகளுள் ஒன்று! ஆக, காலங்கள் மாறினாலும்,
காலநிலைகள் மாறினாலும் தூய்மையான, துல்லியமான வாழ்க்கை முறையானது எந்தக் காலத்திலும் மனிதர்க்கு ஆரோக்கியமான வாழ்வையே அளிக்கும்.
தண்ணீர்
ü நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதே நோய் வராமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். தண்ணீரில் செய்கின்ற தவறு எலலா நோய்களுக்கும் தவறாத காரணமாகி விடுகிறது. காய்ச்சாத தண்ணீராக இருந்தால் அதில் பத்து லிட்டருக்கு ஒரு குளோரின் மாத்திரை என்ற அளவில் போட்டுக் குடிக்க வேண்டும். இந்த குளோரின் மாத்திரைகள் மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
உணவு
ü பனிக்காலத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது. அசைவ உணவுகள் வேண்டும் என்றால் அதை நன்றாக, சுத்தமாக சமைத்து சாப்பிடுதல் நலம். பனிக்காலத்தில் சூடான உணவை சாப்பிடலாம். ஆனால் குளிரூட்டியில் வைக்கப்பட்ட சில்லென்ற உணவுகளை எடுத்துக் கொண்டால், சுவாசக் கோளாறுகள், காய்ச்சல் போன்றவை வரும். பழைய உணவாக இருந்தால் அதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படலாம்.
சுவாசம்
ü பனிக்காலத்தில் ஆஸ்துமா, ஒவ்வாமை, மூக்கடைப்பு, அடுக்குத்தும்மல், இழுப்பு, மூச்சிரைப்பு போன்ற தொந்தரவுகள் அதிகமாக வரும். இதனை "பனியால் வரும் பிணிகள்" என்று சொல்லாம். இதனைத் தடுக்க பனியில் போவதை நிறுத்திக் கொள்ளலாம். இல்லை, பனியில் போய்தான் ஆக வேண்டும் என்றால் பனிக்காலத்திற்கு உகந்த மேலாடைகளை உடுத்திக் கொண்டு வெளியில் போகலாம். இப்படி சிறுசிறு விஷயங்களில் கவனமாகச் செயல்பட்டால் பனிக்காலத்தில் சுவாசம் மோசமாவதைத் தடுத்து, அதனை மோட்சமாகவே வைத்திருக்கலாம்!
வயிறு
ü பனிக்காலத்திலும் வயிற்று உபாதைகளுக்கு விதிவிலக்குகள் இல்லை! பொதுவாக வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் "விப்ரியோ காலரே" என்ற பாக்டீரியா மூலம் ஏற்படுகின்றன. இதன் மூலம் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு, தாது உப்புகளின் இழப்புகள் ஏற்படும். இந்த இழப்புகளை அரிசிக் கஞ்சி, மோர், பழச்சாறு ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் சரியான அளவிலேயே வைத்துக் கொள்ளலாம். மற்றும் "எலக்ட்ரால்",
அல்லது "ஓ.ஆர்.எஸ்". (உப்பு சர்க்கரை சேர்ந்த கரைசல்) குடிக்கலாம். மற்றபடி, மிகக் கடுமையான வயிற்றுப் போக்கு இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதோடு நோயாளிக்கு சிரைவழி சிகிச்சையும் செய்யப்பட வேண்டும்!
டைபாய்டு காய்ச்சல்:
ü சுத்தமற்ற உணவு மற்றும் தண்ணீரால் வருவதுதான்
"டைபாய்டு காய்ச்சல்" என்ற குடல் தொற்று நோய். இந்த நோய் வரும்போது தலைவலி, உடல் சோர்வு, விட்டு விட்டு அதிகமாகின்ற காய்ச்சல், வாந்தி, பேதி மற்றும் சுவாசக் கோளாறுகள் இருக்கும். இந்த நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் மூன்றாம் அல்லது நான்காம் நாளிலேயே இந்த நோயை கண்டுபிடித்து உரிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவேண்டும். சுருங்கச் சொன்னால் சுத்தம் சுகம் தரும். அசுத்தம் அசாதாரண நோய்களை பரிசாகத் தரும்.
சிக்குன் குனியா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்:
ü இந்த காய்ச்சல்கள் இரண்டு வரையான கொசுக்களின் கடியால் வருகின்றன. அதனால் கொசுக்கடியை தவிர்க்க கொசுவலையை உபயோகிக்கலாம், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம். இந்நோய்கள் ஏற்படும்போது கடுமையான காய்ச்சலோடு கண்கள், மூட்டுகள், எலும்புகளில் ஏகப்பட்ட வலியும் இருக்கும். அதிலும் பல், ஈறு, மூக்கு, வாய் வழியாக ரத்தமும் வந்தால் உடனடி சிகிச்சை அவசியம். காரணம் இது ஆபத்தானது. வைரஸ் காய்ச்சல் ஏற்படும் போது இதே அறிகுறிகள் தோன்றும். இந்த நோயை கண்டறிய ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். ரத்தப் பரிசோதனை மூலம்தான் நோயை துல்லியமாக அறிய முடியும்.
மஞ்சள் காமாலை, லெப்டோஸ்பைரோசிஸ்:
ü மஞ்சள் காமாலை நோய், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் வரக்கூடியது! எட்டு வகையான வைரஸ்கள் உள்ளன. இதற்கும் சுத்தமற்ற உணவும், தண்ணீருமே காரணம். பசியின்மை, வாந்தி, கண்கள் -சிறுநீர் மஞ்சளாகிப் போவது, களிமண் நிறத்தில் மலம் போவது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவைதான் இதற்கு சிறந்த மருந்துகள்.
"லெப்டோஸ்பைரோசிஸ்" எனப்படும் எலிக்காய்ச்சலிலும், இதேபோன்ற அறிகுறிகள் தான் இருக்கும். இந்த நோய்க்கு ரத்தப் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் மிகவும் அவசியம். இல்லையென்றால் இது உயிரைப் பறிக்கின்ற நோயாக மாறும் அபாயமும் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மெட்ராஸ்-ஐ
ü "மெட்ராஸ்-ஐ" எனப்படும் இந்த கண்நோய் பனி காலத்தில் கொள்ளை நோயாகப் பரவக்கூடியது. அடினோ வைரஸால் இந்த நோய் வருகிறது. கண்களில் தண்ணீர் வடிதல், கண் சிவத்தல், ஊளை தள்ளுதல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் சுவாசக் கோளாறுகளும் இருக்கும். இந்த நோய்க்கு கண்களில் போடக்கூடிய சில சொட்டு மருந்துகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மருத்துவரின் ஆலோசனைபடிதான் பயன்படுத்த வேண்டும்.
தோல் நோய்கள்:
ü பனிக்காலத்தில் தோல் வறண்டு போவதால் சரும சுருக்கம் ஏற்படும். தோல் நோய் உள்ளவர்களுக்கு இது பெரும் அவதியாகவும் இருக்கும். கால் வெடிப்பு, உதடு வெடிப்பு, தோல் வறட்சி இப்படி பல தொல்லைகள் வரும்.
நோய் தடுப்பு முறைகள்
ü ஈ, பூச்சிகள், கொசுக்கள் மொய்த்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். நன்கு மூடி, பாதுகாக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதேபோல் சுத்தமான தண்ணீரைதான் குடிக்க வேண்டும்.
சிகிச்சை:
¬ எந்த நோய் என்று கண்டுபிடித்து அதற்கு முறையான சிகிச்சை செய்வதுதான் பனிக்காலப் பாதுகாப்பு. பனிக்காலப் பிணியில் இருந்து விடுபடுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. முன் எச்சரிக்கை என்பது நோயின் பிடியிலிருந்து உங்களை முற்றிலும் பாதுகாக்கும்.
==--==